ஆவடி: ஆவடி அருகே ஒன்றிய அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் மற்றும் 50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆவடி அடுத்த கோவில்பதாகை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (50). அதே பகுதியில் உள்ள ஒன்றிய அரசின் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனர். நேற்றிரவு சென்னை மூலக்கடையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார் சிவக்குமார்.
இன்று அதிகாலையில் அனைவரும் வீடு திரும்பினர். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்ததும் சிவகுமார் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 40 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் குற்றவாளிகளை தேடுகின்றனர். இச்சம்பவம் ஆவடி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.