×

பைக் மீது லாரி மோதி பள்ளி மாணவன் பலி: நண்பர் படுகாயம்

குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே தண்டலம், கீவலூர் பகுதியை சேர்ந்தவர் இருசப்பன். இவரது மகன் சஞ்சய் (17). இவரது நண்பர், அதே பகுதியை சேர்ந்த நேதாஜி (17). இவர்கள் இருவரும் அதே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். இருவரும் நேற்று மாலை குன்றத்தூர் பஜாரில் பொருட்களை வாங்குவதற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். சஞ்சய் பைக் ஓட்டி சென்றுள்ளார்.

 பெரும்புதூர்-குன்றத்தூர் பிரதான சாலையில், கெலட்டிபேட்டை சந்திப்பு அருகே, முன்னால் சென்ற லாரியை சஞ்சய் பைக்கில் முந்தி செல்வதற்கு முயன்றுள்ளார். அப்போது பைக் நிலைதடுமாறி கவிழ்ந்ததில், இருவரும் கீழே விழுந்தனர். இதில் லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில், பைக்கை ஓட்டி வந்த சஞ்சய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். நண்பர் நேதாஜி படுகாயம் அடைந்து, உயிருக்கு போராடினார்.

அக்கம்பக்கத்தினர் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஹெல்மெட் அணியாமல் சஞ்சய் பைக்கை வேகமாக ஓட்டி சென்றதே விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்தது. மேலும், இருவரும் பிளஸ் 2 மாணவர்கள் என்பதால், அவர்களிடம் உரிய லைசென்ஸ் இன்றி பைக்கை ஓட்டுவதற்கு மகனிடம் கொடுத்த சஞ்சய்யின் தந்தை இருசப்பன்மீது வழக்குப்பதிவு செய்ய போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

Tags : Lorry , A truck collides with a bike, school student killed, friend seriously injured
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது