அம்பத்தூர்: சென்னை மாநகராட்சி, மண்டலம் 7க்கு உட்பட்ட 79வது வார்டு, அம்பத்தூர் ஒரகடம் லட்சுமி அம்மன் நகர், கண்ணகி குறுக்கு தெருவில் உள்ள சாலை முழுவதும் கழிவுநீரால் மூழ்கியுள்ளது. தினமும் இந்த சாலையை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர், முதியோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வரும் நிலையில் சாலை கழிவுநீரில் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. மேலும் மழைக்காலங்களில் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘கழிவுநீர் பிரச்னை குறித்து மாமன்ற உறுப்பினரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை. மாதந்தோறும் நடக்கும் மாமன்ற உறுப்பினர் கூட்டத்தில் அவர் இதுபற்றி விவாதித்ததாக இதுவரை தெரியவில்லை. எனவே உடனடியாக மாமன்ற உறுப்பினரும், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, கழிவுநீர் வெளியேற்றத்தை தடுக்க வேண்டும். பொதுமக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும்’’ என்றனர்.