சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்பேரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்று (21.09.2022) சென்னை வியாசர்பாடி அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சுவாதீனம் பெறப்பட்டது.
சென்னை, வியாசர்பாடி அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமாக 16,000 சதுரடி பரப்பிலான திருக்குளம் பாலகிருஷ்ணன் தெருவில் அமைந்துள்ளது. இத்திருக்குளத்தை சுற்றி கடந்த 20 ஆண்டுகளாக 26 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். ஆக்கிரமிப்பு செய்திருந்த நபர்கள்மீது சென்னை இணை ஆணையர் (மண்டலம்-1) நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சட்டப்பிரிவு-78 ன் படி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 11 கோடி ஆகும்.
இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி ஆணையர் எம்.பாஸ்கரன், வட்டாட்சியர் (ஆலய நிர்வாகம்) காளியப்பன், ஆய்வாளர்கள் சம்பத், மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.