×

திமுக வார்டு செயலாளர் கொலை வழக்கு பெண் தாதா உள்பட 5 பேர் சைதை நீதிமன்றத்தில் சரண்: மகள் உள்பட 10 பேரிடம் விசாரணை

சென்னை: தாம்பரம் அருகே திமுக வார்டு செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்  தாதா உள்பட 5 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு ஊராட்சி எட்டயபுரம் கிராமம்  எட்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (31), திமுக வார்டு செயலாளர். தற்போது, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நடுவீரப்பட்டு ஊராட்சி 3வது வார்டு உறுப்பினராக வெற்றிபெற்றார். நேற்று முன்தினம் மதியம் அதே தெருவில் உள்ள லோகேஷ்வரி என்பவர் வீட்டு  வாசலில், தலை மற்றும் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்களுடன் சதீஷ் கொலை  செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து  சதீஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சதீஷ் வீட்டின் அருகில் வசித்துவரும் எஸ்தர் (எ) லோகேஸ்வரி (30) என்பவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். மேலும், வீட்டில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனையும் செய்துள்ளார். இதுபற்றி சோமங்கலம் போலீசாருக்கு சதீஷ் தகவல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சதீசுக்கும், லோகேஷ்வரிக்கும் பல மாதங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு லோகேஷ்வரி, சதீஷை தனது வீட்டிற்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர், அவரது வீட்டில் இருந்து சதீஷ் கோபமாக வெளியில் வந்துள்ளார். மதியம் மீண்டும் சதீஷை லோகேஸ்வரி வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அப்போது, தயாராக இருந்த அடியாட்கள் மூலம் சதீஷை அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்ததும், முக்கிய தாதானவான லோகேஸ்வரி பட்டாக்கத்தியுடன் போஸ் கொடுத்த வீடியோ மற்றும்  போட்டோ வெளியாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மணிமங்கலம் உதவி கமிஷனர் ரவி தலைமையில் 2 தனிப்படை அமைத்து, பெண் தாதா லோகேஷ்வரியின் மகள் உள்பட 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெண் தாதா லோகேஸ்வரி (38), நவமணி (28), சதீஷ் (31), கோழி (எ) அன்பு (25), ராஜேஷ் (37) ஆகிய 5 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். முக்கிய தாதானவான லோகேஸ்வரி பட்டாக்கத்தியுடன் போஸ் கொடுத்த வீடியோ மற்றும் போட்டோ வெளியாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.

* 3 கொலை செய்த முக்கிய குற்றவாளி
வார்டு உறுப்பினர் சதீஷ் கொலையில் முக்கிய குற்றவாளியான நவமணி, கடந்த 2 ஆண்டுகளில்  டிவி நிருபர் மோசஸ், பெயின்டர், தற்போது நடுவீரப்பட்டு வார்டு உறுப்பினர் சதீஷ் ஆகிய 3 பேரை கொலை செய்துள்ளார். மேலும் பல ஆண்டுகளாக கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதை காட்டிக்கொடுத்ததால்தான் டிவி நிருபர் மோசஸை கொலை செய்துள்ளார்.

Tags : DMK ,Dada ,Charan ,Saidai Court , DMK Ward Secretary murder case 5 people including Dada in Saitai Court Charan: 10 people including daughter will be interrogated
× RELATED லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ்...