புதுடெல்லி: கர்நாடகா மாநில அதிமுக மாநில செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் அதேப்போன்று அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் புகழேந்தி. இவரை கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக கூறி கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். அதிமுகவில் நீக்கப்பட்டதற்கு எதிராக புகழேந்தி, ஓ.பி.எஸ், இ.பி.எஸ்சுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யு.யு.லலித் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது, ‘‘ஒரு அரசியல்வாதி எந்த எந்த கட்சியில் சேர்வது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். மேலும் இந்த விவகாரத்தில் ஒரு கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதும், உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்பது அதன் அதிகாரத்திற்கு உட்பட்டது. அதன்படியே அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் அவதூறு என்பது எங்கு இருக்கிறது. ஒரு கட்சியின் உள்விவகாரம் சார்ந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை’’ எனக்கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.