ஊத்துக்கோட்டை: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கடந்த 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்தனர். அங்கன்வாடி மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து, கட்டிடம் விரிசல் ஏற்பட்டும் காணப்பட்டது. இதனால் விஷப்பூச்சிகள் அங்கன்வாடி மையத்தின் உள்ளே வந்துவிடுகிறது. இதன்காரணமாக அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயங்குகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அங்கன்வாடி மைய கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி கிராம சபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பெற்றோர்கள் கூறுகையில், ‘பேரிட்டிவாக்கம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் 32 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த அங்கன்வாடி மையம் தற்போது ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள இ சேவை மையத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் விரைவில் கட்ட வேண்டும்’ என்றனர்.