ஆற்காடு : ஆற்காட்டில் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த பன்றிகளை பிடிக்கும் பணி நடைபெற்றது.ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பன்றிகள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை வளர்ப்பவர்கள் உரிய அனுமதி இன்றி பராமரித்து வருகின்றனர். இந்த பன்றிகள் சாலைகளில் பல இடங்களில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல்வேறு வியாதிகள் வரும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்து சுகாதார சீர்கேடு ஏற்படுத்துகின்ற பன்றிகளை பிடிக்க வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் ஏற்கனவே கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நகராட்சி தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணேசன் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் நேற்று வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, தண்டுக்காரன் தெரு, பூபதி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த 40க்கும் மேற்பட்ட பள்ளிகளை அதிரடியாக பிடித்தனர்.
பிடிபட்ட பன்றிகளை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். மீண்டும் இது போன்று அனுமதியின்றி பன்றிகள் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். பன்றிகளை பிடிக்கும் போது சில இடங்களில் அதன் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தகராறு செய்தவர்களை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று எச்சரிக்கை செய்து பின்னர் விடுவித்தனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் சுற்றி தெரியும் பன்றிகளை பிடிக்க நகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.