மதுக்கரை : கிணத்துக்கடவு ஒன்றியம் நல்லட்டிபாளையம் ஊராட்சி சென்றாம்பாளையம் பிரிவில் உள்ள நரிக்குறவர் காலனி உள்ள 40 தொகுப்பு வீடுகளில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக ஆட்சியின் போது 40 தொகுப்பு வீடுகள் கட்டி இங்கு குடியமர்த்தப்பட்டனர்.
தற்போது அந்த வீடுகள் பழுதடைந்து எப்போதும் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.சில மாதங்களுக்கு முன்பு இதில் 2 வீடுகள் இடிந்து விழுந்தபோது உயிர்பலி ஏற்படாமல் அதிர்ஷடவசமாக தப்பினர். இதனால் நரிக்குறவர் இன மக்கள் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இதனை அறிந்த நல்லட்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகா குமரேசன் நரிக்குறவர்களின் தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர முயற்சி செய்து வருகிறார்.
இதனால் அவர்களுக்கு மாற்று இடத்தில் குடியமர்த்த வேண்டும். அதற்காக நரிக்குறவர் காலனிக்கு அருகில் பஞ்சமி நிலமாக கருதப்படும் இடத்தை தேர்வு செய்து அங்கு நரிக்குறவர்களை குடியமர்த்த அனுமதி கேட்டு வருவாய்த்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அப்படி அந்த இடத்தில் தங்க வைக்க அனுமதி கிடைத்ததும் நரிக்குறவர் காலனியில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகள் புதுப்பிக்கப்படும் பணிகள் துவங்கும் என்று கூறப்படுகிறது. இதனால் நரிக்குறவர் காலனியில் வசிப்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.