×

மானாமதுரை அருகே பாண்டியர் கால சூலக்கற்கள் கண்டுபிடிப்பு

மானாமதுரை: மானாமதுரை அருகே பிற்கால பாண்டியர் ஆட்சிக் காலத்தில் நிலம் கொடையாக வழங்கியதற்கான அடையாளமாக மூன்று சூலக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே சின்னக்கண்ணனூரைச் சேர்ந்த சிலம்பரசன் கொடுத்த தகவலின்படி, பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்களான மீனாட்சிசுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர்அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டதன் பேரில் மூன்று சூலக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், ‘‘கடந்த மாதம் ஒரு நிலக்கொடை கல்லானது கண்டுபிடிக்கப்பட்டது தற்போது இந்த பகுதியில் மேலும் 2 நிலக்கொடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இதுபோன்ற நிலக்கொடை வழங்கும் ஒவ்வொரு ஆட்சியாளரும் நான்கு திசைகளிலும் நான்கு கற்களை நட்டு அதில் தமது முத்திரையையும் எந்த நோக்கத்திற்காக அல்லது எந்த கோயிலுக்கு வழங்கப்பட்டது என்ற குறியீடுகளையும் புடைப்புச் சிற்பமாக கற்களில் இடம் பெறச் செய்வர்.

அதாவது சிவன், அய்யனார், காளி கோயில்களுக்கு கொடுக்கும் நிலக்கொடைக்கற்களில் திரிசூலம் இடம் பெற்றிருக்கும். இதனை தேவதானம் என்பர், பெருமாள் கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகளில் சங்கு சக்கரம் இடம்பெற்றிருந்தால் திருவிடையாட்டம் என்றும், சமண கொடையை குறிக்க முக்குடையும் பௌத்த கொடையை குறிக்க தர்மசக்கரம் இடம் பெற்றிருந்தால் அதனை பள்ளிச்சந்தம் என்றும் அழைப்பர். தற்போது நாம் கண்டறிந்த இந்த மூன்று கற்களிலும் ஒரு திரிசூலமும் திரிசூலத்தின் இடதுபுறம் பாண்டியர் கால ஆட்சியாளர்களின் செண்டுகோலும் சூலத்திற்கு வலதுபுறம் ஒரு மீனும் நீள்வாக்கில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.

மீனையும், செண்டுகோலையும் பார்க்கும்போது இந்த பகுதியில் பிற்கால பாண்டியர் ஆட்சிக்காலத்தில் ஒரு சிவன் கோயில் இருந்திருக்க வேண்டும் கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அனுமானிக்கலாம். மேலும் பிற்காலப் பாண்டியர் ஆட்சியின் கீழ் இந்த பகுதி இருந்திருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறியமுடிகிறது.

முன்னர் கண்டுபிடித்த சூலக்கல்லைப் போன்றே தற்போது கண்டுபிடித்த இரண்டு சூலக்கற்களிலும் சூலம், மீன், செண்டும் இருப்பதனால் இவைகளும் பிற்காலப்பாண்டியர் காலத்தைச் சேர்ந்த நிவந்தம் தொடர்பான கொடைக்கற்களாக நாம் கருதலாம். மேலும் இப்பகுதியில் முறையான ஆய்வுகளை தொல்லியல்துறை மேற்கொண்டால் இப்பகுதியின் வரலாற்றை வெளிக்கொண்டு வருவதற்கான ஆதாரங்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது’’ என தெரிவித்துள்ளனர்.

Tags : Manamadurai , Discovery of Pandya period flints near Manamadurai
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை...