சென்னை: என்எஸ்சி போஸ் சாலையில் பழக்கடைக்காரரை அடித்து கொலை செய்த வழக்கில், 2 பேரை போலீசார் கைது செய்தனர். வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் தெருவை சேர்ந்தவர் மணி (57). இவர், பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் பழக்கடை நடத்தி வந்தார். இவரது கடை அருகே பொம்மை கடை நடத்தி வருபவர் நிஜார் கான் (40). கடந்த 11ம் தேதி, நிஜார் கானுக்கும், மணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, நிஜார் கான் தனது நண்பரான அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் (38) என்பவருடன் சேர்ந்து மணியை தாக்கி, கீழே தள்ளியுள்ளார்.
இதில், மணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மணி இறந்தார். இதையடுத்து, பூக்கடை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, நிஜார் கான் மற்றும் சுரேஷை நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.