சென்னை: சென்னை ஐஐடியில் ஒடிசாவை சேர்ந்த ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரிவின் 4ம் ஆண்டு இளங்கலை மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2016ல் தொடங்கி தற்போது வரை 11 தற்கொலை சம்பவம் இங்கு நடந்துள்ளன. சென்னை ஐஐடியில் கடந்தாண்டு பாதி எரிந்த நிலையில் ஒரு மாணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், கேரளாவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதே போன்று 2018ல் கேரளாவை சேர்ந்த மாணவர், வருகை பதிவேட்டில் பற்றாக்குறை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
மேலும் ஒரு ஆய்வு மாணவர், உத்தரபிரதேசத்தை சேர்ந்த முதுகலை தொழில்நுட்ப மாணவர் ஆகியோர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக பேராசிரியர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார். 2019ம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது ஒடிசா மாணவர் தற்கொலை நடந்துள்ளது. 2016ம் ஆண்டு மட்டும் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 3 பேர் மாணவர்கள். 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை 11 பேர் தற்கொலை செய்துள்ளனர். தொடர்ச்சியாக இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் தற்கொலைகள் நிகழ்ந்து வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.