சென்னை: பாஜ நிர்வாகியான சசிகலா புஷ்பா சமீபத்தில் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்தில் பாஜ சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கூட்டம் அலைமோதியதால் நெரிசலாக இருந்தது. கூட்டத்துக்கு நடுவே முன்னாள் எம்பியும், பாஜ மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது பாஜ மாநில பொதுச்செயலாளரான பொன்.பாலகணபதி சசிகலா புஷ்பாவுக்கு அருகில் மிக நெருக்கமாக இருந்தார். அவர் அஞ்சலி செலுத்துவதில் கவனம் செலுத்தாமல், சசிகலா புஷ்பாவை சங்கடத்துக்குள்ளாக்குவதிலேயே குறியாக இருந்தார்.
இதனால், சங்கடம் ஏற்பட்டாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார் சசிகலா புஷ்பா. பொன்.பாலகணபதியின் முகம் சுழிக்க வைக்கும் இந்த செயலை வீடியோவாக பதிவு செய்த சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அதனைப் பார்த்த பலரும் பாஜவின் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டில் நேரில் வந்து ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பொன்.பாலகணபதிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.