×

எடப்பாடிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் விஜிலென்ஸ் விசாரணைக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில்  4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாக கூறி  2018ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்றம், எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து  செய்து உத்தரவிட்டது. அத்துடன் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளதால், அவர்களே விசாரணையை தொடரட்டும் எனத் தெரிவித்து மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ள ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என் ஆர்.இளங்கோ அனுமதி கோரினார்.

ஆனால் அதற்கு  எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கவுதம், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ஏற்கனவே இந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, விஜிலென்ஸ் கமிஷனருக்கு அறிக்கை அளித்துள்ளதாகவும், விஜிலென்ஸ் கமிஷனர் அறிக்கையின் அடிப்படையில் விசாரணையை தொடர்வது குறித்து முடிவெடுக்கப்பார் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் மீது விஜிலென்ஸ் கமிஷனர் நடவடிக்கை எடுக்காத வகையில் தற்போதைய நிலையே நீடிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா எந்த ஒரு தடை உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். எடப்பாடி தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.



Tags : iCourt ,Vigilance ,Edapadi , Edappadi, Tender Irregularity, Vigilance, Investigation, Prohibition, ICourt Refusal
× RELATED கோடைகாலத்தில் விலங்குகளுக்கு நீர்,...