மும்பை: கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தில் ஆன்லைனில் ரூ.1 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு மருந்தை தயாரிக்கும் பணியை புனேயில் உள்ள சீரம் இந்தியா மருந்து கம்பெனி செய்து வருகிறது. வேறு மருந்துகளும் தயாரிக்கும் பணியும் இங்கு நடைபெறுகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ஆதர் பூனேவாலா. சமீபத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான சதீஷ் தேஷ்பாண்டேவுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் அனுப்பப்பட்டது. ஆதர் பூனேவாலா பெயரில் அனுப்பப்பட்ட அந்த தகவலில், வாட்ஸ் அப்பில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கில் உடனடியாக ரூ.1 கோடி பணத்தை டெபாசிட் செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. பூனாவாலாதான் அந்த செய்தியை அனுப்பியதாக நம்பிய தேஷ்பாண்டே, குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் ரூ.1,01,01,554 ஐ டெபாசிட் செய்தார். பின்னர்தான் பூனேவாலா அந்த வாட்ஸ் அப் செய்தியை அனுப்பவில்லை என்று தெரிந்தது. உடனே, போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆன்லைனின் மோசடி செய்த மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.