பள்ளிப்பட்டு: தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் அத்திமாஞ்சேரி உள்ளது. இங்குள்ள, தெலுங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மே.மு.மாதவன். தமிழ் இலக்கியவாதியான இவர் தெலுங்கு மொழி பேசும் மக்கள் நிறைந்த கிராமத்தில், தமிழக அரசு கட்டாய தமிழ் வழி கல்வி உத்தரவால், சிறுபான்மை மொழி பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர் பணியில் சேர்ந்து, கற்பித்தல் பணியில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், மாணவர்களுக்கு தமிழ்மொழி, கல்வி மீது ஆர்வத்தை ஏற்படுத்தி அனைத்து மாணவர்களுக்கு கற்பித்தல் பணியில் சிறந்து விலங்கி வரும் அவருக்கு தமிழக அரசின் சார்பில் ஆசிரியர் தினத்தையொட்டி டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுகல் ஐ.லியோனி ஆகியோர் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினர். தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ண விருது பெற்ற அரசுப்பள்ளி தமிழ்வழி கல்வி ஆசிரியர் மே.மு.மாதவனுக்கு கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.