புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 6 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இதனால், உக்ரைனில் மருத்துவம் படித்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் நாடு திரும்பினார்கள். இவர்கள் இன்னும் உக்ரைன் செல்லவில்லை. இதனால், இவர்கள் படிப்பை தொடர்வது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்டத்தின்படி, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், தங்களின் படிப்பை முடித்து விட்டு ஒரே பல்கலைக் கழகத்தில் மட்டுமே பட்டம் பெற வேண்டும். இதன் காரணமாக உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் வேறு பல்கலைக் கழகங்களுக்கும் சென்று தங்களின் படிப்பை தொடர முடியாத நிலை நீடித்து வந்தது.
இந்நிலையில், இந்த மாணவர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள பிற பல்கலைக் கழங்களுக்கு தற்காலிக சென்று படிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி இந்த ஒப்புதலை அது அளித்துள்ளது. மற்ற நாட்டு பல்கலைக் கழகங்களில் இவர்கள் படித்தாலும், உக்ரைன் பல்கலைக் கழகம் பட்டம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.