மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரம் அருகே கரும்பு அறுவடை பணிக்கு வந்த தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், சருகுகளுக்கு தீவைத்ததில், 6 டன் கரும்புகள் எரிந்து நாசமானது.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள மங்களம் புதூர் கிராமம், எளையாகவுண்டர் காடு பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம்(60). இவர் தனக்கு சொந்தமான 80 சென்ட் நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளிபாளையம் தனியார் சர்க்கரை ஆலையில் வேலை செய்யும் இடைப்பாடி பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் மூலமாக, கரும்பு அறுவடை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கிருந்த தொழிலாளர்கள், காய்ந்துபோன சருகுகளுக்கு தீவைத்துள்ளனர்.
இதனால் தீ மளமளவென பரவி 20 சென்ட் பரப்பளவில் இருந்த கரும்புகளும் எரிந்து நாசமானது. உடனே அங்கிருந்த தொழிலாளர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த வெங்கடாசலம் மற்றும் அவரது மனைவி ஆகியோர், அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் கூறவில்லை. மாறாக அவர்களை அங்கிருந்து செல்லும்படி மிரட்டியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்து அவர்கள் சென்றுவிட்டனர். இதுகுறித்து வெங்கடாசலம் கூறுகையில், என்னிடம் தகவல் தெரிவிக்காமல் கரும்பு தோட்டத்தில் சருகுகளுக்கு தீவைத்துள்ளனர்.
இதுகுறித்த கேட்ட போது, கையில் அறிவாளுடன் மிரட்டினர். இதனால் நானும் எனது மனைவியும் தோட்டத்தில் இருந்து சென்றுவிட்டோம். இந்த தீவிபத்தில் 5 முதல் 6 டன் கரும்புகள் எரிந்து நாசமாகிவிட்டது என்றார்.இதுகுறித்து பள்ளிபாளையம் தனியார் சர்க்கரை ஆலை மேலாளர் செல்வகுமார் கூறியதாவது: கரும்பு தோட்டத்தில் பாம்பு தென்பட்டதால், தொழிலாளர்கள் தீவைத்தனர். தீவைத்த உடனே அறுவடை செய்ததால், எவ்வித எடை குறைப்பும், பாதிப்பும் ஏற்படாது. 4, 5 நாட்கள் ஆகி அறுவடை செய்தால் மட்டுமே எடை குறையவும், பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. விவசாயிக்கு நஷ்டம் ஏற்படாது. இச்சம்பவம் தவறுதலாக நடந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.