சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மன அழுத்தம் இருந்தால் மாவட்ட மனநல மருத்துவர்களை அணுகலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். நீட் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு எழுதிய 1,45,988 பேருக்கும் மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மன அழுத்தம் இருந்தால் மாவட்ட மனநல மருத்துவர்களை அணுகலாம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், நீட் தேர்வு எழுதிய 564 மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பது கண்டறியப்பட்டு, 110 மனநல ஆலோசகர்களை கொண்டு தொடர் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 38 மாவட்டங்களிலும் மாவட்ட கல்வி அலுவலர், மன நல ஆலோசனை குழு மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது என்றார்.