பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியர் தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சிதம்பரம் தலைமை வகித்தார். இந்த ஆசிரியர் தின விழாவில் 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் பாராட்டுச் சான்றிதழையும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பொற்காசுகளையும் பள்ளி ஆசிரியர்கள் வழங்கினர்.
விழாவில் தலைமையேற்று உரையாற்றிய தலைமை ஆசிரியர் சிதம்பரம், முன்னாள் குடியரசுத்தலைவர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணனின் கல்வி புலமையையும், கல்வியிலே அவர் ஆற்றிய நீண்ட கால சேவையையும், அவர் பெற் றிருந்த கல்வியியல் தத்துவ நிபுணத்துவத்தை பற்றி பேசினார். மேல்நிலை வகுப்புகளில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றமைக்காக தமக்கு தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சரால் பாராட்டுச் சான்று வழங்கப்பெற்றதைக் குறிப்பிட்டு, இத்தகைய வெற்றியை பெறுவதற்கு ஆசிரியர்களின் அதீத முயற்சியும் அர்ப்பணிப்புமே காரணம் என்று கூறி அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 19ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் முதல் மதிப்பெண்ணும், பள்ளியிலேயே முதல் மதிப்பெண்ணும் பெற்ற மாணவி மீனாட்சி என்பவருக்கு பள்ளியின் உயர்நிலை உதவித்தலை மை ஆசிரியரும், கணித பட்டதாரி ஆசிரியையுமான பைரவி 1 கிராம் தாங்க நாணயம் பரிசாக வழங்கிப் பாராட்டினார். அதே மாணவி ஆங்கில பாடத்தில் 98 மதிப்பெண் பெற்றமைக்காக ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சுரேஷ், 1 கிராம் தங்க நாணயம் வழங்கினார். 10 ம் வகுப்பு தமிழ் வழியில் பயின்று முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் ஜெயராமனுக்கு வகுப்பு ஆசிரியர் செல்வராஜ், ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை கணித பட்டதாரி ஆசிரியர் லட்சுமி பிரபா தொகுத்து வழங்கினார். வரலாறு பட்டதாரி ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.