காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள் உடன் இருப்போர் தங்கும் அறைக்கு ரூ.20 கட்டணம் வசூலிப்பதால் ஏழை, எளிய, அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டி நேற்றைய (செப்.5) தினகரன் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்எல்ஏ எழிலரசன் காத்திருப்போர் அறைக்குச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது, தனியார் அறக்கட்டளை சார்பில் பராமரிப்பு செலவினங்களுக்காக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த எம்எல்ஏ, இனி காத்திருப்போர் அறைக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எம்எல்ஏ வருகையை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் எம்எல்ஏவிடம், அரசு மருத்துவமனையில் கழிவறை வசதி இல்லாததால் நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் சிரமம் அடைது குறித்து முறையிட்டனர். அதற்கு, விரைவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவறை கட்ட நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் எம்எல்ஏ எழிலரசன் தெரிவித்தார். இதற்கு, நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எம்எல்ஏவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.