சென்னை: சென்னையில் பாரம்பரிய முறையில் நடந்த திருமணத்தில் வங்தேச பெண்ணை, தமிழக பெண் மாலை மாற்றி பிராமண முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
சென்னையில் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர், வங்க தேச பெண்ணை பிராமண முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அப்போது சம்பிரதாயப்படி தந்தையின் தொடையில் அமர்ந்த தமிழ்பெண், வங்கதேச பெண்ணின் கழுத்தில் மாலை அணிவித்தார். இவர்களின் காதலை 80 வயதான பாட்டியும் ஏற்றுக் கொண்டு அச்சதை தூவி வாழ்த்தினார். இந்த திருமணம் குறித்து கனடாவின் ேகல்கரியில் குடியேறிய தமிழ் பிராமண பெற்றோரின் மகள் சுபிக்ஷா கூறுகையில், ‘இது நாங்கள் கண்ட கனவு. இது, சாத்தியம் ஆகும் என்று ஒருபோதும் நான் நினைத்தது இல்லை. எனது மனைவி தினா, வங்கதேச இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரும் ேகல்கரியில் வசிக்கிறார். நாங்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தோம். அது அன்பாக இருந்து காதலாக மாறியது. இந்நிலையில் தற்போது எங்களுடைய பெற்றோர், அவரின் உறவினர்கள் எங்கள் காதலுக்கு துணையாக இருந்தார்கள்.
திருமணத்தின்போது ஒவ்வொரு சடங்கையும் அவரவர் பழக்கவழக்கங்களின்படி செய்தார்கள். இப்போது, நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம்’என்றார்.
கனடாவில் பிளேஸ்கூல் நடத்தி வரும் சுபிக்ஷாவின் தாய் பூர்ணபுஷ்கலா சுப்ரமணி கூறுகையில், ‘29 வயதான என் மகள் சார்டட் அக்கவுன்டாக உள்ளார். இருபாலினராக அடையாளப்படுத்துவதாக தனது 19 வயதில் எங்களிடம் தெரிவித்தார். மதுரையில் வளர்ந்த நான் பின்னர் கத்தார் சென்றேன். அங்கிருந்து கனடாவுக்கு சென்ற பிறகு தான் நாங்கள் இவ்வாறான வினோத சமூகத்தைப் பற்றி அறிந்து கொண்டோம். எங்கள் பயம் என்னவென்றால் இந்தியாவில் உள்ள எங்கள் குடும்பம் எங்களுடனும், எங்கள் மகளுடனும் உறவுகளை துண்டித்து விடுமோ என்று உள்ளது. மேலும் சமூகத்தில் சுபிக்ஷா எப்படி நடத்தப்படுவார். தாய்மை எப்படி எதிர்கொள்வார் என்பது தான் அடுத்த பயமாக இருக்கிறது. மேலும் எங்களது மகள், பெற்றோரின் ‘ஏன்?’ என்ற ஒவ்வொரு கேள்விக்கும்,‘ஏன் இல்லை?’என்று விளக்கம் அளித்தார். ஒரு கட்டத்தில் எங்களிடம் பதில் இல்லாதபோது ஆலோசனைக்கு திரும்பினோம். அப்போதுதான் எங்களது உலக கண்ணோட்டம் படிப்படியாக மாறியது’என்றார்.
தன்னை லெஸ்பியன் என அடையாளப்படுத்தும் தினாவுக்கு வயது 35. இவர் நான்கு ஆண்டுகள் ஒரு ஆணுடன் திருமணம் செய்து வாழ்ந்தார். பிறகு அவரை பிரிந்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘நான் வடகிழக்கு வங்கதேசத்தில் உள்ள மௌல்வி பஜாரில் வளர்ந்தேன். எனது பெற்றோரும், நானும் கடந்த 2003ம் ஆண்டு மாண்ட்ரீலுக்கு வந்தோம். என் பெற்றோர், எனக்கு ஒரு நோய் இருப்பதாக நம்பி 19 வயதாக இருந்தபோது திருமணம் செய்து வைத்தார்கள். சுபிக்ஷாவுடன் டேட்டிங் செய்து நான்கு வருடங்கள் ஆன நிலையில், எனது மூத்த சகோதரி என்னுடனான அனைத்து தகவல் தொடர்புகளையும் துண்டித்து விட்டார். மேலும் அவரது குடும்பத்தினரும் தள்ளியே வைத்தனர். எனது நிலைபாட்டில் உறுதியாக இருந்தேன். இதையடுத்து திருமண நாளில் உறவினர்கள், சகோதரர் பக்கத்தில் இருந்தனர்’ என்றார். மேலும் இந்த திருமணத்திற்கு வந்த விருந்தினர்களின் ஒருவரான சுபிக்ஷாவின் 84 வயதான பாட்டி பத்மாவதி கூறுகையில், ‘எங்களால் புதிய மருமகளைப் பற்றி பேசுவதை பற்றி நிறுத்த முடியவில்லை. பல மாதங்களாக ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசினேன். சந்தேகம் வரும்போது பயத்தை விட அன்பை தேர்ந்தெடுங்கள். நாங்கள் மனமுடைந்து விலகி செல்வதை விட, எங்கள் குழந்தைகளை எங்கள் பக்கத்தில் மகிழ்ச்சியாக வைத்திருக்கவே இதை தேர்ந்தெடுத்தோம்’என்றார். இந்த தம்பதிகள் தங்களது திருமணத்தை கனடாவில் பதிவு செய்தனர். கேல்கேரிக்கு செல்வதற்கு முன் தென்கிழக்கு ஆசியா முழுவதும் இவர்கள் பயணம் செய்ய உள்ளனர்.