சென்னை: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம், ‘வெந்து தணிந்தது காடு’. ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:‘வெந்து தணிந்தது காடு’என்பது பாரதியார் வரிகள். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் அடுத்த வரிகள், ‘தழல் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ’. அதுபோல், இப்படத்திலும் அந்த நெருப்பு இருக்கும் என்று நம்புகிறேன்.
தமிழ்ப் படங்களை தூக்கி நிறுத்துவது தமிழ்ப் படங்கள்தான். தமிழ்ப் படங்களைக் கெடுப்பதும் தமிழ்ப் படங்கள்தான். எனவே, நாம் அனைவரும் நல்ல படம் கொடுக்க வேண்டும். புதிதாக கொடுக்க கொடுக்க ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தியது எந்த நடிகரும் இல்லை. அது ரசிகர்கள் மட்டுமே. நல்ல படங்களுக்கு மக்கள் ஆதரவு தருவார்கள். சிம்பு கடின உழைப்பாளி. படத்தின் வெற்றிவிழாவில் சிம்பு ஆனந்தக்கண்ணீர் விடுவதை நான் பார்க்க வேண்டும்.