டேராடூன்: அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக பப்ளிக் சர்வீஸ் கமிஷன் செயலாளரை உத்தரகாண்ட் அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில அரசின் சார்பில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் கடந்தாண்டு 854 பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மீது டேராடூன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, மேற்கண்ட தேர்வை ரத்து செய்வதாக முதல்வர் அறிவித்தார். மேலும், மேற்கண்ட தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக பிரமுகர் ஹகம் சிங்கை, அக்கட்சி நீக்கியது. இதற்கிடையே தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் செயலாளர் சந்தோஷ் படோனி, தனது பொறுப்பில் அலட்சியம் காட்டியதற்காக அவரை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.