சென்னை: விநாயகர் பெருமான் அவதார திருநாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதோடு தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே விநாயகர் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பல கோயில்களில் தடுப்பு கம்புகள் அமைத்து பக்தர்கள் வரிசையில் வந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளுக்கு அவல், பொரி, பழங்கள் படைத்து வழிபடுவது வழக்கம்.
இதற்கிடையே பூஜை பொருட்களை வாங்க மயிலாப்பூர், கோயம்பேடு, புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, ராயபுரம், தாம்பரம், வடபழனி, ஜாம்பஜார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மாலை நேரத்தில் கூட்டம் அதிகரித்தது. சாலைகளிலேயே பொரி, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மக்காச்சோளம், கொய்யா பழங்கள், கரும்பு, தென்னங்கீற்று ஆகியவை விற்பனையும் களைகட்டியது. விலை அதிகமாக இருந்த போதிலும் அதுபற்றி பொருட்படுத்தாமல் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். பூ, பழங்கள் விலை இரண்டு மடங்காக அதிகரித்து காணப்பட்டது. மல்லிகைப் பூ கிலோ ₹200ல் இருந்து நான்கு மடங்காக உயர்ந்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. முல்லை, ₹200ல் இருந்து ₹500க்கும், கனகாம்பரம் கிலோ ₹1500க்கும், பன்னீர் ரோஜா ₹100லிருந்து ₹140, சாக்லேட் ரோஜா ₹200க்கும், சாமந்தி பூ ₹200, செவ்வந்தி ₹200 முதல் ₹350 வரையிலும், அரளிப்பூ ₹250க்கும் விற்பனை செய்யப்பட்டது. கரும்பு (ஒன்று) ₹20, பொரி ஒரு படி ₹20. அவல், உடைத்த கடலை, நாட்டு சர்க்கரை கொண்ட சிறிய பாக்கெட் ₹10க்கும், சிறிய வகையிலான வாழை மரம் கட்டு ₹70 முதல் ₹100 வரையிலும், வாழைத்தார் ₹400 முதல் ₹800 வரையிலும் சைஸ்க்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்பட்டது.
அது மட்டுமல்லாமல் சிறிய அளவில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றப்படி விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். சிறிய சிலைகள் ₹50 முதல் ₹2000 வரையில் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் விநாயகர் சிலைக்கு வைக்கும் பல வண்ணங்களான குடைகள், எருக்கம்பூ விற்பனையும் அமோகமாக நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் மட்டும் 2500 சிலைகள் வைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் விழாக்குழுவினர் சிலைகளை வைத்துள்ளனர். அங்கு பொதுமக்கள் வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் பொது இடங்களில் பூஜிக்கப்பட்ட சிலைகள் 4 நாட்கள் கழித்து கடற்கரை பகுதிகளில் கரைப்பது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.