தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவில் வேடம் அணியவுள்ள பக்தர்கள், கடலில் புனித நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். நடப்பாண்டு திருவிழா அடுத்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்நிலையில் திருவிழாவில் வேடம் அணியவுள்ள பக்தர்கள், இன்று கடலில் புனித நீராடி சிவப்பு ஆடை அணிந்து அர்ச்சகர் கையால் மாலை போட்டுகொண்டு விரதத்தை தொடங்கினர். 10 நாள் திருவிழாவில் காலி, முருகன், விநாயகர், அனுமன், முனிவர் உட்பட பல்வேறு வேடங்களை பக்தர்கள் அணிவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சொந்த ஊரிலேயே மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள், நடப்பாண்டில் கோவிலுக்கு வந்துள்ளதால் மன நிறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் .