×

அண்ணாநகரில் பட்டப்பகலில் பயங்கரம், நடுரோட்டில் ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக்கொலை; மர்ம கும்பலுக்கு வலை

திருவள்ளூர்: பட்டப்பகலில் பிரபல ரவுடியை ஓடஓட விரட்டி படுகொலை செய்துவிட்டு  தப்பி ஓடிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சந்தீப்குமார் (30). இவர் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொலை, அடிதடி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், நேற்று மாலை 4.30  மணி அளவில் அண்ணாநகர், மடுவாங்கரை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆட்டோ ஒட்டியபடி வந்தார். அங்கு, உறவினர்களுடன் பேசிவிட்டு, தனது வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல், இவரை வழிமறித்து அரிவாள், பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால்  சரமாரியாக வெட்ட முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ‘‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’என்று அலறி கூச்சலிட்டு  நடுரோட்டில் ஓடினார். ஆனால், அந்த மர்ம கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது.

அதில், படுகாயமடைந்த  சந்தீப்குமார் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், அங்கிருந்து அந்த மர்ம கும்பல் தப்பி சென்றது. இதைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தீப் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில், கடந்த 2018ம் ஆண்டு ரவுடி ஆதித்யா என்பவரை அண்ணாநகரில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தீப்குமார் சிறையில் இருந்து வெளியே வந்து ஆட்டோ ஓட்டி வந்ததும், நேற்று இந்த கொலை வழக்கு சம்பந்தமாக சென்னை உயர்நீதி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மடுவாங்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு, நண்பர்களுடன் பேசிவிட்டு, தனது வீட்டிற்கு செல்லும்போது படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

மேலும் நண்பர்களுடன் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டதாகவும், அதனால், அங்கிருந்து கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஆதித்யாவை கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக இந்த கொலை நடந்ததா, நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்து நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட மோதல் காரணமாக கொலை நடந்ததா, அல்லது வேறு ஏதேனும் காரணமா, என்ற பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். ரவுடி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்த ரவுடியை பட்டப்பகலில்  நடுரோட்டில்  ஓட ஓட விரட்டி சென்று வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Annanagar , In broad daylight in Annanagar, a popular rowdy was chased to death in the middle of the road; A web for mystery gangs
× RELATED செல்போனில் பேசியபடி சாலையை கடந்த பெண் பைக் மோதி உயிரிழப்பு