திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு, வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கற்பக விநாயகர் கோயிலில் கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. 2ம் திருநாள் முதல் 8ம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் வெள்ளி கேடகத்திலும், இரவு மூஷிக, சிம்மம், பூத, கமல, ரிஷப, மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடந்து வருகிறது.
ஆறாம் திருநாளான நாளை (ஆக. 27) மாலை 4.30 மணியளவில் கோயிலின் வடக்கு கோபுரம் அருகே கற்பகவிநாயகர் எழுந்தருளி திருவீதி உலாவின் போது அசுரனை வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 7ம் திருநாளான ஆக. 28ல் இரவு மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 8ம் திருநாளான ஆக. 29ல் இரவு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 9ம் திருநாளான ஆக. 30ம் தேதி காலையில் திருத்தேருக்கு கற்பக விநாயகர் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். மாலை 4.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.
மாலை 4.00 மணியவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.
பத்தாம் திருநாளான ஆக. 31ம் தேதி காலையில் கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெறும். அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதிஉலா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டனூர் நா.கருப்பஞ்செட்டியார், ஆ.முத்துப்பட்டணம் சி.சுப்பிரமணியன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.