×

கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனம் பூசும் பணி தீவிரம்: 145 அடி உயரத்தில் சாரம் அமைக்கும் பணி நிறைவு

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடலின் நடுவில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை உப்பு காற்றால் சேதமடையாமல் இருக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுத்தப்படுத்தி, ரசாயன கலவை பூசுவது வழக்கம். கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு ரசாயன கலவை பூசப்பட்டது. கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு இந்த பணி மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூச தமிழக அரசு ₹1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான பணி கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி தொடங்கியது. பணியை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். நவம்பர் 1ம் தேதிக்குள் பணியை முடித்து 2ம் தேதி முதல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

நவம்பரில் சபரிமலை பக்தர்கள் வருகை, பண்டிகை காலம் என்பதால் அதற்குள் பணியை முடிக்க வேண்டியுள்ளது. திருவள்ளுவர் சிலையில் உள்ள வெடிப்புகளில் சுண்ணாம்பு கலவை பூசப்பட்டு, படிந்துள்ள உப்பு காகிதக்கூழ் கொண்டு நீக்கப்படுகிறது. பின்னர் ஜெர்மன் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட சிலிக்கான் எனப்படும் ரசாயன கலவை பூசப்படுகிறது.

இந்த பணிகளால் நவம்பர் 2ம் தேதி வரை திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. சிலையை சுத்தப்படுத்தி, ரசாயன கலவை பூசுவதற்கு வசதியாக, முதலில் 145 அடி உயரத்தில் சாரம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் கடல் சீற்றம், மழை, சூறைக்காற்று காரணமாக சாரம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

ரசாயன கலவை பூசும் பணியை ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் இறுதி வரை 5 மாத காலம் மேற்கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் சாரம் அமைக்கும் பணிதான் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் சிலையில் உள்ள இணைப்பு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த பழைய கலவை அகற்றப்பட்டு உள்ளது. இதையடுத்து தொல்லியல் துறையின் அறிவுரைப்படி, சிலையின் இணைப்பு பகுதிகளில் கடுக்காய்ப்பொடி, கருப்பட்டி, சுண்ணாம்பு, மணல் மற்றும் சில ரசாயனங்கள் கலந்த கலவை நன்றாக பூசும் பணி தற்போது நடந்து வருகிறது. அதைத்தொடர்ந்து அடுத்தகட்ட பணிகள் நடக்க உள்ளன.

கடந்த 2017ம் ஆண்டு ரசாயன கலவை பூசும் பணி திட்டமிட்டதைவிட 4 மாதங்கள் தாமதமாகவே நிறைவடைந்தது. இந்த நிலையில், ‘ரசாயன கலவை பூச சாரம் அமைப்பதுதான் மிகவும் கடினமான பணி. அது நிறைவடைந்துள்ளது. எனவே மழை உட்பட இயற்கை சீற்றங்களால் இடையூறு ஏற்பட்டாலும், திட்டமிட்டபடி ரசாயன கலவை பூசும் பணி முடிக்கப்படும்’ என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : Thiruvalluvar ,Kanyakumari , 133 feet tall Tiruvalluvar statue in Kanyakumari in progress: 145 feet high essence work completed
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி