மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில், கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டம் மூலம், நவீன எரியூட்டும் தகன மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை சுந்தர் எம்எல்ஏ நடத்தினார். மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற வளர்ச்சி திட்டம் மூலம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மயானத்தில் ரூ.1.36 கோடி மதிப்பிலான நவீன எரியூட்டும் தகன மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் நடந்தது.
பேரூராட்சி மன்ற தலைவர் நந்தினி கரிகாலன் தலைமை தாங்கினார். துணை தலைவர் எழிலரசன் முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான க.சுந்தர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்தார். இதில், பேரூராட்சி செயல் அலுவலர் மா.கேசவன் திமுக நிர்வாகி உசேன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த எரியூட்டும் தகன மேடை அமைக்கும் பணி அடுத்த ஆறு மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.