×

பெரியபாளையம் அருகே 6 வழிச்சாலைக்கு விவசாயிகள் எதிர்ப்பு; போலீசாரின் பேச்சுவார்த்தை தோல்வி

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே 6 வழிச்சாலை திட்டத்தினை விளைநிலங்கள் வழியே செயல்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரித்தனர். போலீசார் பேச்சுவார்த்தையை ஏற்க விவசாயிகள் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக ஆந்திரா மாநிலம் சித்தூர் முதல் தச்சூர் வரையில் சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் இணைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள 34 கிராமங்கள் வழியாக 116 கிலோ மீட்டர் தொலைவில் 1238 ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்டங்களாக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வடமதுரை பகுதியில் சாலைப் பணிகளுக்காக அலுவலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் பெரியபாளையம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை பெரியபாளையம் காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் விவசாயம் சங்க தலைவர் சம்பத் தலைமையிலான விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, விளை நிலங்களை அழித்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் சாலை பணிகளை மேற்கொள்ள கூடாது. எதிர்ப்பை மீறி பணிகள் நடைபெற்றால் தொடர் போராட்டங்களில் என விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும், அதுவரையில் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் கேட்டு கொண்டனர். அப்போது, சாலை பணிகள் நடைபெற்றால் கட்டாயம் போராட்டம் நடைபெறும் எனவும், தங்களை கைது செய்தாலும் சாலை பணிகளை அனுமதிக்க முடியாது எனவும்  விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Tags : Periyapalayam , Farmers protest for 6 lane near Periyapalayam; Police negotiations fail
× RELATED ஏரியில் அளவுக்கு அதிகமாக சவுடு மண்...