ஆவடி: ஆவடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில் சென்னை ஐஐடி பயிற்சி மாணவி பரிதாபமாக இறந்தார். அவர் தற்கொலை செய்தாரா அல்லது யாரேனும் தள்ளிவிட்டு கொலை செய்தார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒடிசா மாநிலம், சாம்பலூர் பகுதியை சேர்ந்தவர் மேகாஸ்ரீ(29). இவர் பிஎச்டி முடித்து விட்டு, சென்னை ஐஐடியில் கடந்த மாதம் 3 மாத ஆராய்ச்சி பயிற்சிக்கு வந்தார். ஐஐடி அருகிலேயே வீடு எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தன்னுடன் படிக்கும் தோழியை பார்க்க நேற்று முன்தினம் ஆவடிக்கு மின்சார ரயிலில் மேகாஸ்ரீ சென்றார்.
அவரை பார்த்துவிட்டு, மீண்டும் ரயிலில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில், ஆவடி-இந்து கல்லூரி ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் வந்தபோது, திடீரென ஓடும் ரயிலில் இருந்து மேகாஸ்ரீ தவறி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து ஆவடி ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மேகாஸ்ரீயின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின்பேரில் எஸ்ஐ சுந்தர்ராஜன் தலைமையில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்தாரா அல்லது அவரை வேறு யாரேனும் கீழே தள்ளி விட்டார்களா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.