×

திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சுனாமி வீடுகள்: அடிப்படை வசதியின்றி தவிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் அருகே ஏ.மணக்குடி பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுனாமி குடியிருப்பு வீடுகளுக்கு, அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் புறக்கணித்தனர். இதனால் பயனாளிகள் குடியேறாமல் ஏராளமான வீடுகள் காலியாக உள்ளதால், கருவேல மரங்கள் சூழ்ந்து பயனற்ற நிலையில் உள்ளது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி கடலோர பகுதியில் உள்ள பொதுமக்கள் சுனாமி போன்ற பேரிடர்களில் சிக்கி தவிக்க கூடாது என்ற அடிப்படையில், திமுக ஆட்சியில் 13 ஆண்டுகளுக்கு முன் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 250க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தனியார் மூலமாக டெண்டர் விடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த சுனாமி குடியிறுப்பு வீடுகள் பெரும்பாலும் வீடுகள் இல்லாத பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்யாமல், சில அதிகாரிகள் முறைகேடாக வீடுகள் உள்ளவர்களுக்கு இத்திட்டத்தில் வீடுகளை ஒதுக்கீடு செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சுனாமி குடியிறுப்பு வீடுகள் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து பெரும்பாலான வீடுகளில் பயனாளிகள் வீடுகளை பயன்படுத்த முன்வராமல் வீடுகளை பூட்டியே வைத்துள்ளனர். மேலும் அங்கு உள்ள வீடுகளில் சுமார் 60 சதவீதம் வீடுகளுக்கு மேலாகவே பூட்டியே கிடக்கின்றன. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

அந்த சுனாமி குடியிருப்பு பகுதி திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்பதால், அதற்கு பின் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுக அரசு அப்பகுதிக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வில்லை. இந்த காரணத்தால் அங்கு குடியேறிய பயனாளிகள் இன்று வரை சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள அனைத்து வீடுகளிலும் பயனாளிகள் குடியேறாமலும் முறையான பராமரிப்பு இன்றி வீடுகளை சுற்றி கருவேல மரங்கள் சூழ்ந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வீடுகள் பல ஆண்டுகளாக பயனற்ற நிலையில் உள்ளது. இது மிகுந்த வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுவதுடன், இனிமேலாவது இந்த வீடுகளை சுற்றியுள்ள கருவேல மரங்களை அகற்றுவதுடன், அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தும் அதன் பிறகு உரிய பயனாளிகள் அவரவர் வீடுகளில் குடியேற வைக்க வேண்டும். ேமலும் அந்த வீடுகளை வீடு இல்லாமல் வாடகை கூட கொடுக்க முடியாத சூழ்நிலையில் வாழ்ந்து வரும் ஏழை ,எளிய பயனாளிகளுக்கு இந்த பயனற்று கிடக்கும் வீடுகளை ஒதுக்கீடு செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அப்பகுதியில் குடியிருக்கும் பயனாளி கலையரசன் கூறுகையில், கலைஞர் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இங்கு பல கோடி ரூபாய் செலவில் எங்களுக்கெல்லாம் வீடு கட்டி கொடுத்தார்கள். வீடு கட்டி கொடுத்த பின்னர் திமுக ஆட்சி காலம் முடிந்து விட்டது. அதற்கு பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இங்குள்ள சுனாமி குடியிருப்பு பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முன்வரவில்லை. இதனால் இங்கு சீரான மின்சாரம் வருவதில்லை. இங்குள்ள வீடுகளில் உள்ள மின் விசிறி, மிக்ஸி, கிரைன்டர் உள்ளிட்ட பொருட்களும் பழுதடைந்து விடுகிறது.

குடிதண்ணீர் வசதியின்றி பல ஆண்டுகளாக டேங்கர்களில் வரும் தண்ணீரை தான் இன்று வரை குடம் ஒன்றுக்கு ரூ.7 முதல் 10 வரையிலும் விலை கொடுத்து வாங்கு பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும் வீடுகளில் பயனாளிகள் குடியேராமல் உள்ளதால் வீடுகளை சுற்றி கருவேல முட்புதர்கள் மண்டிகாடு போல் உள்ளது. முட்புதர்களை அகற்றி தருவதுடன் நாங்கள் அடிப்படை வசதி கோரி கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை.

அதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சொல்லி ஊராட்சிக்கும் எந்த நிதியும் ஒதுக்கீடு செய்து கொடுக்கவில்லை. திமுக ஆட்சி காலத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த சுனாமி குடியிருப்பு பகுதிக்கு, சீரான மின்சாரம், குடிதண்ணீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து எங்களை போன்ற ஏழை ,எளிய மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதுகாக்க வேண்டும் என்றார்.

Tags : Tsunami , DMK rule, AIADMK rule, Tsunami houses,
× RELATED தைவான் கிழக்கு கடற்கரையில்...