ஈரோடு: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியின் 2 நாள் போலீஸ் காவல் முடிந்து நேற்று மாலை மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோட்டை சேர்ந்தவர் ஆசிப் முசாப்தீன் (27), சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உறுப்பினராக இருப்பது தெரிய வரவே ஈரோடு வடக்கு போலீசார் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவரை 2 நாள் காவலில் விசாரிக்க மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாலதி கடந்த 10ம் தேதி அனுமதி வழங்கினார். இதையடுத்து, ரகசிய இடத்தில் வைத்து ஆசீப் முசாப்தீனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினருடன் நேரடி தொடர்பு இல்லை என்றும், அந்த அமைப்பை சேர்ந்தவர்களை இதுவரை நேரில் சந்தித்தது இல்லை என்றும், இணையதளம் மூலமாகவே தொடர்பு ஏற்படுத்திக்கொண்டதாகவும் அவர் கூறி உள்ளார். விசாரணை முழுவதையும் போலீசார் வீடியோ பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து நேற்று மாலை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆசீப் முசாப்தீனை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 24ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார். அதன்படி அவர் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.