சென்னை: கூட்டுறவு துறை வங்கிகளில் பதவி உயர்வு அளிப்பதாக கூறி பலரிடம் பல கோடி ரூபாய் பெற்று, அதிமுக முன்னாள் அமைச்சர் முறைகேடு செய்துள்ளதாக கூட்டுறவு துறை வங்கி ஊழியர்கள் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து கூட்டுறவு துறை வங்கி ஊழியர்கள் கூறியதாவது: 2012ல் கூட்டுறவு துறை வங்கிகளில் காலியாக உள்ள 3,589 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியானது. தேர்வர்கள் கூட்டுறவு பட்டய பயிற்சி பெறவில்லை. எனவே, தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் மூலம் வழக்கு தொடரப்பட்டது.
இதை தொடர்ந்து, இப்பணிகளுக்கு தேர்வானவர்கள் ஒரு வருடத்துக்குள் கூட்டுறவு பட்டய பயிற்சி பெற்று வேலையில் சேரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 3,589 பேரில் சுமார் 3500 பேர் பட்டய தேர்வு எழுதி, 2016ல் பல்வேறு கூட்டுறவு துறை வங்கி மற்றும் பணியாளர் கூட்டுறவு சங்கங்களில் வேலைக்கு சேர்ந்தனர். குறைந்த மதிப்பெண் பெற்றவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு அதிக சம்பளத்தில் உயர் பதவிகளில் பணி நியமனம் செய்து அன்றைய கூட்டுறவு துறை அமைச்சர் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த ஊழல் முறைகேடுகள் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஊழியர்கள் கூறினர்.