சித்தூர் : சித்தூரில் ஆஜாதிகா அம்ருத் மகோற்சவம் முன்னிட்டு சித்தூர் சந்தப்பேட்டை பகுதியில் மாத்ரு சேவா சங்க தலைவர் கந்தா நேற்று வீடு வீடாக சென்று 1000 பேருக்கு தேசிய கொடியை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளின் மேலே தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாத்ரு சேவா சங்கம் சார்பில் சித்தூர் சந்தப்பேட்டையில் உள்ள ஆயிரம் பேருக்கு இலவசமாக தேசிய கொடியை வழங்கி வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் அவர்களின் வீட்டின் மேலே இந்த மாதம் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய கொடியை பறக்க விட வேண்டும். அப்போதுதான் உலக நாடுகளுக்கு நம் இந்தியா ஒற்றுமையான நாடு என தெரியவரும். இந்தியாவில் பல்வேறு மதங்கள் இருந்தாலும் அனைத்து மதத்தினரும் இந்திய தேசத்தை நேசித்து வருகிறார்கள்.
உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு இந்தியா உலக நாடுகளில் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகிறது உலக நாடுகளுக்கு இணையாக இந்தியா தற்போது நன்கு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆகவே ஒவ்வொரு குடிமகனும் அவரவர்களின் வீட்டின் மேலே தேசிய கொடியை பறக்க விட்டு இந்திய தேசத்தை வணங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் சங்க உறுப்பினர்கள் சண்முகம் கோகுல் யாதவ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் வீடு வீடாகச் சென்று தேசிய கொடியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.