சென்னை: தமிழ பாஜ தலைவர் அண்ணாமலை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் இன்று காலை அளித்த பேட்டி: பாராளுமன்றத்தில் விலைவாசி தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரே நேரத்தில் பதில் அளித்திருக்கிறார்கள். நிதி அமைச்சர் பேசும் போது தமிழக எம்பிக்கள் உள்பட அனைவரும் வெளிநடப்பு செய்து விட்டார்கள். நிர்மலா சீதாராமன் பேசியதற்கு, மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துள்ளார். பிராண்டட் உணவு பொருட்கள் மீது வரி விதிப்பு தொடர்பாக பல பொய்கள் கட்டவிழ்த்து விடப்படுகிறது.
சமீபத்தில் உணவு பொருட்கள் மீது, குறிப்பாக பிராண்டட் பொருட்கள் மீது 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. அதற்கும் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து இருந்தார். ஜிஎஸ்டி கவுன்சிலில் 56 பரிந்துரை ஏக மனதாக ஏற்ற பிறகே பிராண்டட் பொருட்களுக்கு வரி அமலானது என்றும் தெரிவித்து இருந்தார். உத்தரபிரதேசம், குஜராத்தை விட தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கும் போது மாநில அரசு குறைக்காமல் குறைகூறுவது ஏற்புடையது அல்ல. தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை முற்றிலுமாக தரப்பட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.