×

கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் எதிரொலி மாவட்டத்தில் 19 பண்ணைகளில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு-நோய் அறிகுறி இருந்தால் தெரிவிக்க உத்தரவு

கோவை : கேரளாவில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருதை அடுத்து கோவையில் உள்ள 19 பன்றி பண்ணைகளில் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பண்ணைகளில் உள்ள பன்றிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.கேரளாவின் வயநாடு பகுதியில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதையடுத்து, வயநாடு பகுதியில் உள்ள பன்றி பண்ணைகளில் இருந்த 300-க்கும் மேற்பட்ட பன்றிகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, பன்றிகள் அழிக்கப்பட்டன.
இந்நிலையில், கண்ணூர் மாவட்டத்திலும் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கேணிச்சார் ஊராட்சிக்கு உட்பட்ட பன்றி பண்ணையில் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பண்ணையில் பாதிக்கப்பட்ட 14 பன்றிகள் உயிரிழந்துள்ளன.

இந்த நோய் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்பதால் அப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட பன்றிகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரள அரசு தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு பன்றிகளை கொண்டு வர தற்காலிக தடை விதித்துள்ளது.

கேரளாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சலை அடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள பன்றி பண்ணைகளை கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர், போளூவாம்பட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட 19 இடங்களில் பன்றி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் கால்நடை பராமரித்துறை டாக்டர்கள் நேரடியாக சென்று ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

முன்னெச்சரிக்கையாக பன்றிகளின் எச்சங்கள், கழிவுகள் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டுள்ளது. பண்ணை உரிமையாளர்களுக்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இது குறித்து கோவை கால்நடை பராமரிப்புதுறை மண்டல இணை இயக்குனர் பெருமாள்சாமி கூறியதாவது: ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் என்பது பன்றிகளுக்கு மட்டுமே பரவும். பன்றிகளின் மூலமாக மனிதர்களுக்கு பரவாது.

இதற்கு என தனியாக தடுப்பூசி மற்றும் சிகிச்சை என்பது இல்லை. இதனால், காய்ச்சல் பாதிக்கப்பட்டால் பன்றிகள் உயிரிழக்க நேரிடும்.
பாதிக்கப்படும் பன்றிகளுக்கு அதிக காய்ச்சல், இருமல் உள்ளிட்டவை இருக்கும். கண்கள் மூடிவிடும். கருசிதைவு ஏற்படும். குறைபிரசவத்தில் குட்டிகள் பிறக்கும். கேரளாவில் வேகமாக பரவிவருவதால், கோவை மாவட்டத்தில் உள்ள 19 பன்றி பண்ணைகளில் ஆய்வு செய்யப்பட்டது. மாதிரிகள் சேரிகரிக்கப்பட்டுள்ளன.

பன்றிகள் திடீர் இறப்பு இருந்தால் உடனடியாக தகவல் அளிக்க பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பண்ணையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கிருமி நாசினி தெளிக்க வேண்டும். வெளியாட்களை பண்ணைக்குள் அனுமதிக்க வேண்டாம். ஓட்டல் கழிவு உணவுகளை பன்றிக்கு அளிக்க கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பன்றி பண்ணைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kerala , Coimbatore: Animal Husbandry Department in 19 pig farms in Coimbatore following the rapid spread of African swine fever in Kerala.
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...