சேலம்: சேலத்தில் கைதான வாலிபரை தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் நேரில் சந்தித்து பேசியது உளவுப்பிரிவு விசாரணையில் தெரியவந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ஆசிக்(23). இவர் சேலத்தில் வெள்ளிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் ஆசிக்கை தீவிரவாத கும்பலை சேர்ந்த ஒருவர் நேரில் சந்தித்துள்ள புது தகவல் வெளியாகியுள்ளது. வாலிபர் ஆசிக், சமூக வலைதளத்தின் மூலம் விளையாட்டுத்தனமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளார்.
இதையடுத்து அவரை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர், ஆசிக்கை அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளார். அவரது பெயர் தெரியாது என கூறிய ஆசிக், அவர் கோவை மற்றும் பெங்களூரில் இருந்து வந்ததாக உளவுப்பிரிவினரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் வேலையில் உளவுப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவர் செல்போனிலும் பேசியுள்ளதால் எங்கிருந்து பேசப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.