×

சிவா விஷ்ணு ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா

திருவள்ளூர்:  திருவள்ளூரில் உள்ள சிவா ஆலயத்தில் உள்ள அம்மன்களுக்கு ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் மற்றும் பூங்குழலி அம்மன்களுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சி பூங்காநகரில் பிரசித்தி பெற்ற சிவா விஷ்ணு ஆலயம் உள்ளது. இத் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அம்மன்களுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு வளையல் அலங்காரம் மற்றும் பூஜை நடைபெறுவது வழக்கம். அதே போல் நேற்று முன்தினம் ஆடிப்பூரம் விழா நடைபெற்றது.

 இவ்விழாவையொட்டி ஆலய வளாகத்தில் உள்ள பத்மாவதி தாயார், பூங்குழலியம்மன், கன்னிகா பரமேஸ்வரி, கிளநாராயணி ஆகிய அம்மன்களுக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பக்தர்கள் பச்சரிசி, பழவகைகள் ஆகியவற்றையும் அம்மன்களுக்கு படைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் பூ, பழம், பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகி ஆர்.பசுபதி மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Tags : Aadipura Festival ,Shiva Vishnu Temple , Aadipura Festival at Shiva Vishnu Temple
× RELATED ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு...