×

5 பெண்களை ஏமாற்றி மணந்த ஆசாமி: 4வது மனைவி போலீசில் புகார்

தவளக்குப்பம்: புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சீனு (எ) தெய்வநாயகம் (42). இவர் கடலூர் மாவட்டம் மேலகுப்பத்தை சேர்ந்த காயத்ரி உள்ளிட்ட 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. அவரது 4வது மனைவியான காயத்ரி, பெண் குழந்தையுடன் புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: புதுவை அரியாங்குப்பத்தை சேர்ந்த சீனு என்கிற தெய்வநாயகத்துக்கும் எனக்கும் 2020 ஜூலை 27ல் நிச்சயதார்த்தம் நடைபெற்று, அதே ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி புதுச்சேரி பிருந்தாவனத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் திருமணம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு என்பதால் மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி வைக்க முடியவில்லை. வரதட்சணையாக 6 பவுன் நகை, பைக், பீரோ, கட்டில் வழங்கப்பட்டது. மூன்று மாதங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். பின்னர் அதிக பணம், நகை வேண்டுமென்று தினந்தோறும்  அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால் என்னை தாயார் வந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அப்போது நான் 3 மாத கர்ப்பிணியாக இருந்தேன். அதன்பிறகு கணவர் வந்து பார்க்கவுமில்லை, பேசவும் இல்லை. அவரிடம் சென்று கேட்டபோது, நீ எனக்கு மனைவியே இல்லை என உதாசீனப்படுத்தினார். இதுபற்றி விசாரித்த போது, அவருக்கு ஏற்கனவே 3 மனைவிகள் உள்ளது தெரியவந்தது. முதல் மனைவி அனிதா என்கிற இந்திரகுமாரி, 2வது மனைவி தேவி, 3வது மனைவி கனகவல்லி, நான்காவதாக என்னை திருமணம் செய்துள்ளார். நான் பிரசவத்திற்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரேமா என்கிற பிரபாவதியை 5வதாக திருமணம் செய்துள்ளார்.

என்னை திருமணம் செய்யும்போது, முதல் மனைவியுடன் விவாகரத்து பெறப்பட்டது என்று கூறி திருமணம் செய்தார். ஆனால் விவாகரத்து ஆகவில்லை. 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது குறித்து அவரிடம் கேட்டபோது, அடியாட்களை வைத்து அடித்து கொலை செய்வதாக மிரட்டினார். இவர் மீது வேறு சில சமூக விரோத வழக்குகளும் நிலுவையில் உள்ளது. எனவே சீனு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Asami , Asami cheated and married 5 women: 4th wife complains to police
× RELATED பாஜ ஓபிசி அணி மாநில செயலாளர்-...