மதுரை: யார் அதிகமாக முதலீடு செய்கிறார்களோ, அவர்கள் அதிமுக தலைமைக்கு வரலாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசினார். மதுரை சிந்தாமணியில் நேற்று ஒருங்கிணைந்த மாவட்ட அமமுக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது: மக்கள் பணத்தை தண்ணீராக செலவழித்து கொண்டிருந்தவர்களால், ஜெயலலிதா, எம்ஜிஆரிடம் இருந்த தலைமை பதவி பணம் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது. தலைமை பதவியை ஏலம் போட்டு, ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு அசிங்கத்தை ஏற்படுத்தி, தற்போது நீதிமன்றத்தில் குடுமிப்பிடி சண்டையில் போய் நிற்கிறது. எந்த வழக்கில் சிறைக்கு செல்வோமோ என்ற அச்சத்துடன்தான் எடப்பாடி பழனிசாமி அணி இருந்து வருகிறது. விரைவில் அதிமுகவினர் எங்களிடம் வந்து சேருவார்கள். அதிமுக கம்பெனி போல ஆகிவிட்டது. யார் அதிகமாக முதலீடு செய்கிறார்களோ அவர்கள் தலைமைக்கு வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.