சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருவதால், சென்னையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி சாதனங்களை பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை 28ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். இந்நிலையில், சென்னை முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனைகள் நடத்தி வருகின்றனர். அதேநேரம், வரும் 28 மற்றும் 29ம் தேதிகளில் சென்னை மாநகர காவல் எல்லையில் குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வாழி சாதனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறி யாரேனும் டிரோன் மற்றும் இதர ஆளில்லா வான்வாழி சாதனங்களை இயக்கினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.