புழல்: சோழவரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் நேற்று ஒன்றிய கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ராஜாத்திசெல்வசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலசேகரன், அமிர்தமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வரவு - செலவுகள் மற்றும் ஒன்றியத்தில், பல்வேறு பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் தார் சாலை, பேவர் பிளாக் மற்றும் சிமென்ட் சாலைகள், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றுவது உள்பட பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், கவுன்சிலர்கள் கனிமொழி சுந்தரமூர்த்தி, சுகவேணிமுருகன், ரேவதிதுரைவேல், மாலதிமகேந்திரன், ஷகிலாசகாதேவன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.