×

சோழவரம் அருகே பாம்பு கடித்து சிறுமி பரிதாப பலி: போலீசார் விசாரணை

புழல்: சோழவரம் அருகே நேற்று முன்தினம் மதியம் பாம்பு கடித்து சிறுமி பரிதாபமாக பலியானார். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சோழவரம் அருகே புதிய எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் தனியார் செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு, தமிழகம் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான கூலி தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இதில், புதுவை மாநிலத்தை சேர்ந்த முத்துராமன் என்பவர் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 8 வயதில் வைஷ்ணவி என்ற மகள் உள்ளனர். இச்சிறுமி அங்குள்ள ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்நிலையில், செங்கல் சூளையில் பெற்றோர் வேலை செய்து கொண்டிருந்தபோது, வைஷ்ணவியும் பக்கத்தில் மற்ற சிறுவர், சிறுமியர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.

இதையடுத்து, சூளையின் பின்புறம்  அவள் சென்றாள். அப்போது, அங்கிருந்த முட்புதரில் பதுங்கி இருந்த பாம்பு எதிர்பாராதவிதமாக கடித்தது. இதனால், வலியால் அவள் அலறி துடித்தாள். அவளது அலறல் சத்தத்தைக் கேட்ட சக தொழிலாளர்கள் அந்த சிறுமியைமீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவளை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக, சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Cholavaram , Girl tragically dies of snake bite near Cholavaram: Police investigation
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு