திருப்போரூர்: சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் மத்திய அரசின் ஒன்றுக்கு மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மறுவாழ்வு பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கான பாலியல் சுகாதாரக் கல்வி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு நிறுவனத்தின் இயக்குனர் நசிகேதா ரௌட் தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர் சங்கர நாராயணன் வரவேற்றார். முனைவர் அமர்நாத் விளக்க உரையாற்றினார். திருப்போரூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் லாவண்யா இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்தார். குழந்தைகள் மனநல மருத்துவர் சாந்தி மற்றும் மருத்துவம், உளவியல், சமூகம், சட்டம் ஆகிய பல்வேறு துறைகளின் சார்பில் அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள் பாலியல் கல்வியை புரிந்து கொள்ளுதல், பாலியல் சுகாதாரம், மூடப் பழக்க வழக்கங்களை உடைத்தெறிதல் ஆகியவை குறித்து மாற்றுத் திறனாளிகளின் பெற்றோருக்கு எடுத்துரைத்தனர். முடிவில் முனைவர் தனவேந்தன் நன்றி கூறினார்.