×

தேவதானப்பட்டி வாரச்சந்தை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பேரூராட்சியில் வாரச்சந்தை கட்டிடத்தை பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவதானப்பட்டி பேரூராட்சி வளாகத்தில் வாரச்சந்தை கடைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி சுற்றுவட்டார 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள், தேவதானப்பட்டி புதன்கிழமை வாரச்சந்தைக்கு பொருட்கள் வாங்க வருகின்றனர்.

இப்பகுதியில் தேவதானப்பட்டி புதன்கிழமை வாரச்சந்தை கிராமப்புற மக்களுக்கு முக்கிய சந்தையாகும். இந்த சந்தையில் அனைத்து வகையான காய்கறி கடைகள், பழக்கடைகள் மற்றும் மளிகை கடைகள் இயங்கி வருகிறது. இந்த வாரச்சந்தையில் 2019-2020ம் ஆண்டு 110 கடைகள் கட்டுவதற்கு ரூ.1கோடி மதிப்பில் டென்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.

தற்போது 90 சதவிகித பணி முடிவடைந்த நிலையில் அப்படியே பணிகள் நிற்கிறது. தற்காலிக வாரச்சந்தை பேரூராட்சி அலுவலகத்தை ஒட்டி மரத்தடியில் திறந்தவெளியில் நடந்து வருகிறது. வாரச்சந்தை நடக்கும் போது மழை பெய்தால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.  

புதிய வாரச்சந்தை கட்டிடத்தை திறப்பது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஆனால் இதுகுறித்து கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவதானப்பட்டி வாரச்சந்தை புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Godhanapatti Varachandava , Daily Market, Devanathapatti, People request
× RELATED தேவதானப்பட்டி வாரச்சந்தை கட்டிடத்தை...