சென்னை: நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலின்படி தேர்வு மைய எண்ணிக்கைக்கு ஏற்ப நாளை சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிறப்பு பேருந்துகள் முறையாக நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணிப்பர் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது. குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 7301 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.
இத்தேர்வை 22 லட்சம் பேர் எழுதுகின்றனர். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது. பகுதி 1ல் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். பகுதி 2ல் பொது அறிவு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வு 38 மாவட்டங்களில் 316 தாலுகாக்களில் நடைபெறுகிறது. மொத்தம் 7,689 மையங்கள் தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் குரூப் 4 பதவிக்கு 22 லட்சம் பேர் வரை எழுதுவது இதுவே முதன்முறை என்பது நினைவுகூரத்தக்கது.