×

திருத்தணியில் பைக்குகள் மோதல்: கிருத்திகை பாதுகாப்பு பணிக்கு வந்த 2 போலீசார் உள்பட 3 பேர் காயம்

திருத்தணி: திருத்தணியில் பைக் மோதிய விபத்தில் கிருத்திகை பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த 2 போலீசார் உள்பட 3 பேர் காயமடைந்தனர். திருத்தணியில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருவார்கள். இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீசார், பாதுகாப்பு பணிக்காக திருத்தணிக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரியும் ராஜேஷ் (28), பார்த்திபன் (30) ஆகியோரும் இந்த பாதுகாப்பு பணிக்காக திருத்தணிக்கு வந்திருந்தனர்.  அவர்கள், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தளபதி மகளிர் கலைக்கல்லூரியில் நேற்று முன்தினம் இரவு தங்கினர். பின்னர் நேற்று காலை பாதுகாப்பு பணிக்காக பைக்கில் புறப்பட்டனர்.

அப்போது, குன்னத்தூரில் ஓட்டல் நடத்தி வரும் திருத்தணி அடுத்த தாஸ் ரெட்டி கண்டிகையை சேர்ந்த வேலு (27) என்பவர் பைபாஸ் சாலையில் பைக்கில் வந்து கொண்டிருந்தார். இரு பைக்குகளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, 3 பேரையும் மீட்டு, சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Tiruthani ,Krithikai , Bike collision in Tiruthani, 3 people injured, Krithikai security duty
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...