கொடைக்கானல் : கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பல்கலைக்கழக மாணவிகள், குடியிருப்பிற்குள் வரும் காட்டெருமையை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். அதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பிற்குள் வரும் காட்டெருமைகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும் வகையில் இத்தொழில் நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது.
தவிர தெருக்களில் வைக்கப்படும் குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறையும்பட்சத்தில் அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கும் வகையிலும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் ரிமோட் கண்ட்ரோல் ஒன்றையும் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். இந்த செயலி, தனது பாதுகாவலருக்கு தான் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் அளிக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பள்ளி படிப்பை முடித்த மாணவிகள் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இணையலாம் எனவும், அவர்களுக்கான அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.